1958-ம் ஆண்டு ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் முழுவதும் அடுத்த 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதி என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து பல பத்தாண்டுகளாக ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தின் கீழ் உள்ளது. இம்மாநிலத்தில் பல ஆயுதக்குழுக்கள் உள்ளன. அவர்கள் சுயாட்சி, தனிநாடு போன்ற கோரிக்கைகளை வைத்து போராடி வருகின்றனர். இதில் நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (ஐ.எம்) என்ற அமைப்புடன் 2015-ல் அரசு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. ஆனால் அதன் பின்னரும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் நீக்கப்படவில்லை.
நாகாலாந்து பிரச்னையின் இறுதி தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு மேம்பட்ட கட்டத்தில் உள்ளது என நவ., மாதம் மத்திய அரசு கூறியது. கிளர்ச்சியாளர்களை சமாளிக்க மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் அளித்து வருவதாக தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றமான பகுதியாக அறிவித்துள்ளது. மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் மாநிலம் உள்ளதாக கூறியிருக்கிறது. மேலும் மக்களுக்கு உதவ ஆயுத படைகளை பயன்படுத்துவது கட்டாயம். 30 டிச., 2020 தொடங்கி 6 மாதத்திற்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என கூறியுள்ளது.
AthibAn Tv