விவசாய சங்க பிரதிநிகளுடன், மத்திய அரசு, இன்று ஆறாம் கட்டமாக பேச்சு நடந்தது. மீண்டும் ஜன. 4-ம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இதுவரை நடந்த ஐந்து கட்ட பேச்சும், தோல்வியில் முடிந்தன. ஆறாம் கட்ட பேச்சு, இன்று நடந்தது.
இன்று நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன.,4-ம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 'சம்யுக்த் கிசான் மோர்ச்சா' என்ற விவசாயிகள் அமைப்பு மெகா இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. அப் பேரணியை, விவசாய சங்கத்தினர் ஒத்திவைத்துள்ளனர்.
விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது என விவசாயத்துறை அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சாதகமாகவே முடிந்தது. அவர்கள் வைத்த கோரிக்கைகளில் இரண்டிற்கு ஒரு மித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜன.,4 ம் தேதி நடைபெறும் என்றார்.
வேளாண் கழிவு எரிப்பவர்களுக்கான அபராதம் ரத்து மற்றும் மின்சார திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்வது குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக ஆராய குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
AthibAn Tv