இந்திய - சீன எல்லைப் பகுதியில் துருப்புகளை விலகிக்கொள்வது தொடர்பாக நடக்கவிருந்த 9வது சுற்று பேச்சுவார்த்தை, சீனாவின் புதிய ராணுவ அதிகாரி நியமனத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில் இருந்து இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதற்றத்தை தணிக்க இரு நாட்டு படைத் தலைவர்கள் அளவிலும், அமைச்சர்கள் அளவிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கணிசமான படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் 8வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்குவது குறித்தும், இதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 9வது சுற்று பேச்சுவார்த்தையில் அதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எட்டப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் சீன ராணுவத்தின் வடக்கு பிரிவு படை தளபதியாக ஜெனரல் ஜாங் சுடோங் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஜெனரல் ஜாவோ சோங்கி இப்பகுதிக்கு பொறுப்பு வகித்தார். இவர் தான் 2017-ல் டோக்லாம், 2020-ல் கிழக்கு லடாக் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பை செயல்படுத்தியவர். இதுவே இரு தரப்பு மோதலுக்கு வழிவகுத்தது. தற்போது புதிய தளபத்ஹியாக ஜெனரல் ஜாங் சுடோங் பொறுப்பேற்றுள்ளார். அவர் ஆளுகையின் கீழ் வரும் 3,488 கிலோமீட்டர் நடைமுறை எல்லைக் கட்டுபாடு கோட்டின் நிலைமை குறித்து கேட்டறிவார். முக்கிய முன்னேற்றங்களை பார்வையிடுவார். அதற்கு நேரம் எடுக்கும் என்பதால் 9வது சுற்று பேச்சுவார்த்தை தாமதமாவதாக கூறப்படுகிறது.
AthibAn Tv