கர்நாடகாவில் டிசம்பர் 22 மற்றும் 27ம் தேதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், 117 தாலுகாக்களில் 3019 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. 1.17 லட்சத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் கட்டமாக, 109 தாலுகாக்களில் 2,709 பஞ்சாயத்துகளுக்கு, டிசம்பர் 27 அன்று தேர்தல் நடைபெற்றது. இங்கே, 1,05,431 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இரண்டு கட்டங்களையும் சேர்த்தால், 226 தாலுகாக்களில் 5,728 கிராமங்களில், 72,616 உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் முக்கியமானவையாகும். இருப்பினும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் இந்த கட்சி சின்னங்களில் போட்டியிடவில்லை. ஆனால் வேட்பாளர்களுக்கு கட்சிகள் ஆதரவு வழங்கின.
இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 342 பேர் முன்னிலை வகிக்கிறார்கள். காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 3,155 பேர் முன்னிலை வகிக்கிறார்கள். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 1,582 பேர் முன்னிலை வகிக்கிறார்கள்.
கடந்த மாதம் பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் அண்டை மாவட்டமான தும்கூரிலுள்ள சிரா ஆகிய 2 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலின்போது, இரண்டிலும் பாஜக வெற்றி பெற்றது. தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதால் எடியூரப்பா மகிழ்ச்சியில் உள்ளார்.
AthibAn Tv