Type Here to Get Search Results !

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு - வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது : உயர் நீதிமன்றம் மறுப்பு



தமிழகம் உள்பட 16 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் 94 வருடங்களாகச் செயல்பட்டு வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு கடந்த 17 ம் தேதி முதல் வர்த்தகத் தடையை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது . மேலும் லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரைத் தலைமையமாகக் கொண்டு செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த இணைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.யு.எம் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கில் வங்கிகள் இணைப்பு முறையான வங்கி ஒழுங்குமுறை விதிகளின் கீழ் நடைபெறவில்லை என்றும் ,விதிமீறல் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லக்ஷ்மி விலாஸ் வங்கி பங்குதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் வங்கிகளின் இணைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, எம்.எஸ். ரமேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு என்றும், இதில் தலையிட முடியாது என்று மறுத்து விட்டனர்.

அதேவேளையில் லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரர்களின் நலனை டிபிஎஸ் வங்கி பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom