பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.
கோவையை அடுத்த மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மகா தீப வழிபாடு நடைபெற்றது.
கொரோனா கால ஊரடங்கால் அரசு விதிமுறைப்படி பக்தர்கள் யாரும் அதிகம் அனுமதிக்காத நிலையில் அளவான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டு, விழா துவங்கியது. முன்னதாக பெரிய விநாயகர் கோயிலில் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மலையில் அமைந்துள்ள மூலவரான சிவனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் மாவிளக்கு ஏற்றுதல் வழிபாடுகள் நடைபெற்றன.
தர்மலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி மற்றும் கோயில் அறங்காவலரும், நல்லறம் அறக்கட்டளையின் தலைவருமான அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பக்தர்களுடன் கோயிலை வலம் வந்து, நந்தி தேவனுக்கு முன் உள்ள கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அடிவார பகுதியிலுள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, தீபம் ஏற்றப்பட்டது.
இறுதியாக, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடிக்கும் படி கோயில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மயில்சாமி கவுண்டர், சண்முகநாதன், திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
AthibAn Tv