டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்றவுடன், பேச்சுவார்த்தையை அரசு தொடங்கும். பனிக்காலத்தில் விவசாயிகள பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இருப்பினும் விவசாயிகள் போராட்டம் வலுத்ததையடுத்து, அவர்களை டெல்லிக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதியளித்தனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், விவசாயிகளோ, ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா மைதானத்தில்தான் போராட்டம் நடத்துவோம் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். டெல்லி-ஹரியானாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பகுதியான டிக்ரியில் விவசாயிகள் குவிந்துள்ளதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் டிக்ரி பகுதியிலிருந்து வடக்கு டெல்லியில் உள்ள புராரி மைதானத்துக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றவுடன் அவர்களுடன் பேச்சு தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
AthibAn Tv