Type Here to Get Search Results !

வங்கக் கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளது : தூத்துக்குடியில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது



வங்கக் கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

அது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் வரும் 3-ம் தேதி முதல் கனமழை பெய்யும். மீனவர்கள் யாரும் வரும் 4-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் அனைத்து கடலோர கிராமங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகுகள் மற்றும் 3000 நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.

இதேநேரத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளத்தை சேர்ந்த 46 விசைப்படகுகள் கரை திரும்பாமல் இருந்தன. புயல் எச்சரிக்கை தொடர்பாக அந்த படகுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து 20 படகுகள் இன்று காலை கரை திரும்பிவிட்டன. இன்னும் 26 படகுகள் மட்டும் கடலில் உள்ளனர். அவர்களுக்கும் தகவல்கள் போய் சேர்ந்துவிட்டன. நாளை காலைக்குள் அந்த படகுகளும் கரை திரும்பிவிடும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே வங்கக்கடலில் புதிய புயல் உருவாகவுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom