காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடசென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ. நீண்ட காலமாகவே பொறுப்பில் இருப்பவர். 13 வருடங்கள் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். தமாகா ஜி.கே.வாசனுக்கு நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர். இருந்தாலும் அவர் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் செல்லாமல், காங்கிரஸிலேயே உறுதியாக ஈடுபாட்டுடன் நின்றவர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும் ஒருமுறை பதவி வகித்தவர். ஆனால், திருநாவுக்கரசு கட்சியின் மாநில தலைவராக இருந்போது, கட்சி விதிகளை காரணம் காட்டி மாவட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விலகினார். அதன்பின் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார்.
இந்நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து ராயபுரம் மனோ அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
AthibAn Tv