ஆந்திர மாநிலத்தில் நிவர் புயலின் தீவிரத்தால், சித்துார், கடப்பா, நெல்லுார் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏரிகள், குளங்கள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தை உலுக்கிய நிவர் புயல் கரையைக் கடந்த போதிலும், வேலுார் வழியாக, ஆந்திராவின் சித்துார், திருப்பதி, கடப்பா, நெல்லுார் போன்ற பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சித்துார் மற்றும் கடப்பா மாவட்டங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் நிரம்பி, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக, நகருக்குள் மற்றும் கிராமங்களுக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்றிரவு பல்வேறு கிராமங்களில், வீடுகளுக்குள் நீர் புகுந்ததால், அங்கு வசித்த மக்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன், ஆந்திர மாநில தீயணைப்புப் படையினர் வெளியேற்றி வருகின்றனர்.
பல்வேறு ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுப்பதால், பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என, கடப்பா மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கடப்பா மாவட்டத்தில், 20 ஆண்டுகளுக்குப் பின், தற்போது தான் கனமழை பெய்து வருகிறது.
AthibAn Tv