பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கு, ராணுவ வீரர்களுக்காக, 'சாய்' என்ற செயலியை, இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீன ராணுவத்தினர், சமூக வலைதளங்கள் வாயிலாக, இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பெற முயற்சிகள் செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, நம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக, பிரத்யேகமாக செயலி ஒன்றை, இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடியின், 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், 'சாய்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் ராணுவ வீரர்களும், அதிகாரிகளும், இந்த செயலியை பயன்படுத்தலாம்.
இந்த செயலி, மிகவும் பாதுகாப்பானது. அதன் வாயிலாக பகிரப்படும் தகவல்கள், 'ஹேக்' செய்ய முடியாத வகையில், தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 'ஆண்ட்ராய்டு' மொபைல் போனில் உள்ள, 'வாட்ஸ் ஆப், டெலிகிராம், சம்வத், ஜிம்ஸ்' மற்றும் 'மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ காலிங்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த செயலியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த செயலியை உருவாக்கிய கர்னல் சாய் சங்கருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
AthibAn Tv