காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் கெவாடியாயில் அமைந்துள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நாட்டிலேயே முதன்முறையாக ஒற்றுமை சிலையை காண கடல் விமான (சீ பிளேன்) சேவையை மோடி தொடங்கி வைத்தார். இந்த சேவையை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரு நபருக்கு சுமார் 4,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 19 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற போதிலும், 12 பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முதற்கட்டமாக ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு இந்த சீ பிளேன் செல்லும்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியா வரை ஒரு சீப்ளேன் சேவை தொடங்கப்படுகிறது. இது சுற்றுலாவை அதிகரிக்க உதவும். கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 130 கோடி இந்தியர்கள் இணைந்து கொரோனா வீரர்களை கவுரவித்தனர். இன்று, காஷ்மீர் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் நகர்ந்துள்ளது. இன்று நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணங்களை நிறுவுகிறது.
இன்று, உலகின் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாரும் பயனடைய முடியாது. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியது. புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் தியாகம் செய்ததில் சிலர் வருத்தப்படவில்லை என்பதை நாடு ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நேரத்தில், இந்த மக்கள் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள்.
தேசத்தின் நலனுக்காக இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் உள்ள தொடர்பை பாகிஸ்தான்ஒப்பு கொண்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் அரசியல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தியாவின் எல்லை உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது வலுவாக உள்ளன. எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
AthibAn Tv