இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்தே, விங் கமாண்டர் அபிநந்தனை பாக்., ஒப்படைத்ததாக, வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதாக, பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த, அபிநந்தன்(37). கடந்த ஆண்டு (2019) துவக்கத்தில், காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, 2019 பிப்ரவரியில், இந்திய விமானப் படை விமானங்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்தின. இதில், மிக் - 21 ரக விமானத்தில் சென்ற அபிநந்தன், பாக்., விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதன் பின், பாக்., பகுதிக்குள், அவரது விமானம் விழுந்தது. அபிநந்தனை, பாக்., ராணுவத்தினர் கைது செய்தனர். 60 மணி நேரத்துக்குப்பின், அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குலுக்கு பயந்தே அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி கட்சி தலைவர் சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார். இதனை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அபிநந்தனை கைது செய்த பின், அவசர கூட்டத்தை பாகிஸ்தான் கூட்டியது. இக்கூட்டத்திற்கு வர இம்ரான் கான் மறுத்துவிட்டார். கூட்டத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கலந்து கொண்டார். அப்போது, தயவு செய்து அபிநந்தனை விடுவித்து விடுங்கள். இல்லையெனில், இன்று இரவு (அன்றைய தினம்) 9 மணிக்கு, பாகிஸ்தானை இந்தியா தாக்கும் என பயத்துடன் கூறினார். அப்போது அங்கிருந்த பாக்., ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு வியர்த்துக் கொட்டியது; அவரது கால்கள் நடுங்கியதை நான் கண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
AthibAn Tv