மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டசபையில் குரல் ஓட்டெடுப்பு வழியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த உள் ஒதுக்கீடு சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது கவர்னர் இன்றுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 45 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்று இம்மசோதா தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புதிய சட்டத்தின் வழியாக ஒரு ஆண்டுக்கு அரசு பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள் வரை மருத்துவ இடங்களில் கூடுதலாக சேர முடியும். இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் எழுதிய கடிதத்தில் சட்டம் குறித்து முடிவு எடுக்க 3 முதல் 4 வாரகால அவகாசம் தேவை எனவும், இதனை அமைச்சர்கள் குழுவிடம் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சட்டத்திற்கு வழி வகை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசாணை அரசு விளக்கம்
அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்ட மசோதா கவர்னரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும், மருத்துவ கலந்தாய்வு துவங்கியதால் அவசர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு விளக்கம் அளித்துள்ளது.
AthibAn Tv