நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் கூறியுள்ளார்.
பி.ஏ.சி. எனப்படும் பொது விவகாரங்களுக்கான 2020 குறியீடு என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மாநிலங்களில் சமநிலை, வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றில் நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களில் கேரளா 1.388 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தமிழகம் 0.912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இது குறித்து முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: தமிழகம் இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நமது அயராத முயற்சியின் விளைவாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவாகும். நம் மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
AthibAn Tv