பாகிஸ்தானில், 'சார்க்' மாநாடு நடத்தும் திட்டம், மாலத்தீவின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
'சார்க்' எனப்படும் தெற்காசிய பிராந்திய கூட்டுறவு நாடுகளின், வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. நேபாளத்தின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், சார்க் அமைப்பின், 19வது உச்சி மாநாட்டை, பாகிஸ்தானில் நடத்தும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.நேபாளம் தாக்கல் செய்த இந்த தீர்மானத்திற்கு, தெற்காசியாவில், மாலத்தீவின் வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
''கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், சார்க் மாநாடு நடத்துவது சரியல்ல,'' என, அவர் கூறினார். இதையடுத்து, பாகிஸ்தானில் உச்சி மாநாடு நடத்தும் தீர்மானத்தை, நேபாளம் வாபஸ் பெற்றது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானில், சார்க் மாநாடு நடத்துவதை, இந்தியா விரும்பவில்லை. இந்தியாவின் இந்த கருத்துக்கு ஆதரவாக, மாலத்தீவு செயல்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில், இந்தியா மீது, பாக்., குற்றம் சாட்டியது. அப்போது, 'குறிப்பிட்ட நாட்டின் மீது குற்றஞ்சுமத்துவது, விவாதத்தை திசை திருப்பி விடும்' என, மாலத்தீவு தெரிவித்தது.
மேலும், 'பன்முக சமூகத்துடன், 20 கோடி முஸ்லிம்கள் வசிக்கும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை, இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனக் கூறுவது தவறு' எனவும், மாலத்தீவு, இந்தியாவுக்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.
AthibAn Tv