''அடுத்த ஐந்தாண்டுகளில், எத்தனை தனியார் ரயில்கள் இயக்க, அரசு திட்டமிட்டுள்ளது,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கேள்வி எழுப்பினார்.
லோக்சபாவில், 'அடுத்த ஐந்தாண்டுகளில், எத்தனை தனியார் ரயில்களை இயக்க, அரசு திட்டமிட்டுள்ளது. 'ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதால், ரயில்வே பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் அரசிடம் உள்ளதா; அவர்களை தனியார் இயக்கும் ரயில்களில் பணியமர்த்தும் திட்டம் உள்ளதா?' என்ற, கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியுஷ் கோயல் அளித்த பதில்: தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில், நவீனமான ரயில்களை, தனியாரின் பங்களிப்போடு இயக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, 12 தடங்களில், தனியார் நிறுவனங்களிடமிருந்து, பயணிகள் ரயில்கள் இயக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
எந்தெந்த தடங்கள் என்ற விபரங்கள், ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், ரயில், ரயில்பாதை பாதுகாப்பு உள்ளிட்டவை, மத்திய அரசிடமே தொடர்ந்து இருக்கும்.தனியார் மயமாக்குதல் காரணமாக, ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. தனியார் பங்களிப்போடு, புதிய ரயில்கள் இயக்குவதால், தற்போது உள்ள பயணிகள் ரயில் சேவை, எதுவும் பாதிக்கப்படாது.
அதனால், தற்போது பணியில் உள்ள ஊழியர்களின் பணியும் பாதிக்கப்படாது. ரயில்வே ஊழியர்களின் நலன்கருதி, தனியார் இயக்கும் ரயில்களுக்கான ஊழியர்களை, ரயில்வே துறையே வழங்குவது என, முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் பதில் அளித்தார்.
AthibAn Tv