கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. இம்மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதவ் இன்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தார். அவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது எனத் தீர்ப்பளித்தார்
இதனால் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. பொதுவாக அரசுத் தரப்பில் தொடர்ந்த வழக்கில் பின்னடைவு ஏற்படும்பட்சத்தில் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்படும். ஆனால், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுமா என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ வழக்கறிஞர் லலித் சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்கையில், “நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்களின் நகல் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்தத் தீர்ப்பின் விவரத்தை சிபிஐ அமைப்பின் சட்டவல்லுநர்கள் குழு படித்துப் பார்த்து ஆய்வு செய்யும். அதற்குப் பிறகு மேல்முறையீடு செய்யலாமா என்பது குறித்து அந்தக் குழுவினர் அளிக்கும் ஆலோசனையின்படி முடிவு எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
AthibAn Tv