ராஜ்யசபாவில் காகிதங்களை கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹர்வன்ஷ் மீது எறிய முயன்ற எம்.பி.,க்கள் 8 பேர் பார்லி., வளாகத்திலேயே விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தேநீர் வழங்கிய ஹர்வன்ஷ்-ன் செயலை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன், காகிதங்களைக் கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹர்வன்ஷ் மீது எறிய முயன்றனர். இதனையடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 8 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
இதனை கண்டித்து பார்லி., வளாகத்தில் 8 எம்.பி.,க்களும் இரவு முழுவதும் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.,க்களுக்கு இன்று (செப்.,22) காலையில் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹர்வன்ஷ் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அவையின் துணைத் தலைவர் ஹர்வன்ஷ்-ன் செயலுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
சில நாட்களுக்கு முன்பு தன்னை அவமதித்தவர்களுக்கும், தர்ணாவில் அமர்ந்தவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தேநீர் பரிமாறுவது ஹரிவன்ஷ்-ன் எளிமையான மனம் மற்றும் பெரிய இதயம் கொண்டவராக ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதையே காட்டுகிறது. அது அவருடைய மகத்துவத்தைக் காட்டுகிறது. ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களுடன் இணைகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
AthibAn Tv