காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நிலை கொண்டுள்ள இந்திய ராணுவ முகாம்கள் குறித்த துல்லியமான தகவல்களை பெறுவதற்கு, சீனாவின் ஜிலின் - 1 செயற்கை கோள் தரவுகளை பாகிஸ்தான் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான ஜிலின் -1 செயற்கைக்கோள் தரவை வாங்க பாகிஸ்தான், சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவின் வர்த்தக ரீதியான ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளான ஜிலினை சாங் குவாங் சேட்டிலைட் டெக்னாலஜி நிறுவனம் இயக்கி வருகிறது. புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் ஜிலின் செயற்கைகோள், பத்து செயற்கைக்கோள்களின் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை பூமியின் எந்த இடத்தையும் இதன் மூலம் மீண்டும் கண்காணிக்க முடியும். ஜிலின் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் அளிக்கும் பஞ்ச்ரோமடிக் படம் மூலம் 0.72 மீட்டர் மற்றும் மல்டி ஸ்பெக்ட்ரல் படம் மூலம் 2.88 மீட்டர் அளவு வரை, துல்லியமாக இடத்தை அடையாளம் காண உதவும்.
மேம்பட்ட நில கண்காணிப்பு செயற்கைக்கோள் எல் பேண்ட் ரேடார் மற்றும் ஜிலின் -1 ஆகியவற்றின் தரவுகளை பாகிஸ்தான் 2019 ம் ஆண்டில் வாங்கியதாக கூறப்படுகிறது.ஆனால் நிலம் மற்றும் வளங்களை ஆய்வு செய்தல், இயற்கை பேரழிவுகளை கண்காணித்தல், விவசாய ஆராய்ச்சி, நகர்ப்புற கட்டுமானம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்காக செயற்கைகோள்தரவுகள் வாங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு அருகே சீன ராணுவத்தின் அத்துமீறுலுக்கு மத்தியில், பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே அத்துமீறி நடத்தப்படும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இது இந்தியாவுக்கு இருமுனை போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
AthibAn Tv