இந்தியாவில் 2019ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகளும், ஆண்டுக்கு 4,05,861 பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் தரப்பில் ‛இந்தியாவில் குற்றங்கள்-2019' என்னும் அறிக்கை வெளியானது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகளும், ஆண்டுக்கு 4 லட்சத்து 5 ஆயிரத்து 861 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகமாகும். இதில் பெரும்பாலான குற்றங்கள் கணவர் மற்றும் உறவினர்கள் மூலம் அரங்கேறியுள்ளது.
2018ம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,78,236 பதிவாகியுள்ளன. அதேபோல் 33,356 கற்பழிப்புகள் பதிவாகியுள்ளன. பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 2018 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ல் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளன.
அதாவது 2019ம் ஆண்டில் மொத்தம் 1.48 லட்சம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகள் மற்றும் 35.3 சதவீத வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
AthibAn Tv