ஸ்டெர்லைட் விவகாரத்தில், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை செயல்பட்டு வந்தது. ஆலை கழிவுகளால் சுற்றுச் சூழல் பாதிப்பதாகவும், நச்சு புகையால் மக்களுக்கு நோய்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆலையை மூட வலியுறுத்தி 2018, மே மாதம் நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்தும், ஆலையை திறக்க உத்தரவிட கோரியும், ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட், துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த விதிமுறைகளை பின்பற்றவே இல்லை என்றும், அதனால், அந்த ஆலையை மூட உத்தரவிட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது. மேலும் ஆலையை மூடும்படி, அரசு எடுத்த முடிவுக்கு, அரசியல் காரணங்கள் உள்ளதாக கூறிய, ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு, குட்டு வைத்த நீதிபதிகள், ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தங்கள் தரப்பை கேட்காமல் முடிவை மாற்றக்கூடாது என தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 'வேதாந்தா குரூப்' நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
AthibAn Tv