சீரம் மையம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணியை நேற்று துவக்கியது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஜென்னர் மையம் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் சீரம் மையம் தடுப்பூசி மருந்தை தயாரிக்க உள்ளது. இது தொடர்பான முதற்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்டமாக மனிதர்களிடம் செலுத்தும் பரிசோதனை துவங்கியது.
இது குறித்து புனேயில் பரிசோதனை நடைபெறும் பாரதிய வித்யாபீட மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் லால்வானி கூறியதாவது:தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொள்ள 25 பேர் முன்வந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேரிடம் நோய் எதிர்ப்பு அணுக்கள் தொடர்பான சோதனை நடைபெற்றது. அதில் மூவருக்கு அந்த அணுக்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து எஞ்சிய இருவருக்கு முதன் முதலாக தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. அதற்கு முன் அவர்களின் இருதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பம் உள்ளிட்ட அம்சங்கள் சோதிக்கப்பட்டன. அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு கூறினார்.
AthibAn Tv