அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கும் ஈரான், தங்கள் நாட்டில் மூடப்பட்ட இரண்டு ஆணுசக்தி தளங்களை பார்வையிட ஐ.நா., கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிகப்படியான அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கினார் டிரம்ப். அதன் பிறகு ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அந்த தடைகள் இந்தாண்டு அக்டோபருடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மீண்டும், வலுவான பொருளாதார தடையை ஈரான் மீது சுமத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 13 நாடுகள் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக உள்ளன.
இந்நிலையில் ஐ.நா.,வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் ரபேல் கிராஸி, ஈரான் சென்று அந்நாட்டு அதிகாரிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மூடப்பட்ட அணுசக்தி தளங்களை சர்வதேச அணுசக்தி முகமையினர் பார்வையிட ஈரான் அனுமதித்துள்ளது.
இது குறித்து இரு தரப்பினரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 'ஈரான் தாமாக முன் வந்து சர்வதேச அணுசக்தி முகமை சந்தேகிக்கும் இரண்டு அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி தந்துள்ளது. அதனால் இப்பிரச்சினை தொடர்பாக ஈரானுடன் மேற்கொண்டு கேள்விகள் எதுவும் இல்லை. சரிபார்ப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில், சர்வதேச அணுசக்தி முகமை சுதந்திரம், சார்பற்ற தன்மை, தொழில்முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பதை இரு தரப்பும், அங்கீகரிக்கிறோம். ஈரானின் பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு, சர்வதேச அணுசக்தி முகமை சட்டங்கள் மற்றும் விதிகளின் படி ரகசிய தகவல்களை பாதுகாக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AthibAn Tv