இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், பாங்காங் ஏரியில் புதிய கட்டுமான மற்றும் டெம்சோ அருகே 5ஜி நெட்வொர்க் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் இடையே நடைபெற்ற மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க எல்லையில் இரு நாட்டு படைத் தலைவர்கள் அளவிலான ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இரு தரப்பிலிருந்து கணிசமான படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. சீனாவுடான ராணுவ மற்றும் ராஜதந்திர ரீதியிலான பேச்சு தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராக உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியிருந்தார்.இந்நிலையில், லடாக் எல்லை கட்டுப்பாடு பகுதி அருகே டெம்சோக் பகுதியில் தகவல் தொடர்புக்காக 5ஜி நெட்வொர்க்குகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து நிறுவுவதற்கு தேவையான பணிகளை சீனா செய்து வருவதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சீன படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ள பாங்காங் ஏரியிலும் வடக்கிலும் புதிய கட்டுமானம் காணப்படுகிறது. இந்தியா உடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் சீனா கூடாரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
AthibAn Tv