நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 51 பேரை சுட்டுக்கொன்ற நபருக்கு பரோலே இல்லாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்று கிறைஸ்ட்சர்ச். இங்குள்ள, அல் - நுார் என்ற மசூதியில், நேற்று, ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கறுப்பு உடை மற்றும் தலையில் 'ஹெல்மெட்' அணிந்த மர்ம நபர் ஒருவன், மசூதிக்குள் நுழைந்தான். அவன் கைகளில் இருந்த அதிநவீன இயந்திர துப்பாக்கியால், கண்ணில் பட்டவர்களை எல்லாம், சரமாரியாக சுடத் துவங்கினான். இதைப் பார்த்து, மசூதியில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். சற்றும் பதறாமல், மசூதியின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, அங்கு இருந்தவர்களை, அந்த மர்ம நபர் சுட்டுக் கொன்றான். தொழுகைக்காக வந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நியூசிலாந்தின் லின்வுட் என்ற இடத்தில் உள்ள மசூதியில், இதே போன்ற ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதிலும், சிலர் கொல்லப்பட்டனர். இதனை, பேஸ்புக் பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்தான். இந்த இரண்டு துப்பாக்கி சூடு சம்பவத்திலும், மொத்தம், 51 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பிரென்ட்டன் டாரன்ட்(29) என்பவனை போலீசார் கைது செய்தனர்.
பிரென்ட்டன் மீது 51 கொலை, 40 கொலை முயற்சி, பயங்கரவாத செயலுக்கான ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதனை அவனும் ஒப்பு கொண்டான். இதனையடுத்து அவனுக்கு பரோலில் வர முடியாத ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நீதிபதி கேமரூன் மேண்டர் தனது தீர்ப்பில், குற்றவாளி பிரென்ட்டன் குற்றங்கள் மிகவும் கொடூரமானது. ஆயுள் முழுவதும் சிறை என்பது கூட அந்த கொலை பாதகங்களுக்கு பிராயச்சித்தமாகாது. மிகவும் கறைபடிந்த ஒரு பாவ கருத்தியலில் இருந்து இந்த கொலை பாதகம் நடந்துள்ளது. பிரென்ட்டன் செயல் மனித விரோதமானது. தன் தந்தையின் முழங்காலை கட்டிக்கொண்ட 3 வயது குழந்தையை கூட கொலை செய்திருக்கிறான் இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு குற்றவாளி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
AthibAn Tv