லண்டனில் நடந்த மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில், சகுந்தலா தேவியின் சாதனையை முறியடித்து, தங்கம் வென்ற 20 வயது இந்திய இளைஞர், 'உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்தை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
லண்டனில் கடந்த ஆக., 15ம் தேதி, 'மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்'டில் மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, கிரீஸ், பிரான்ஸ் மற்றும் லெபனான் உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து, ஐதராபாத்தை சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ்(20) கலந்து கொண்டார். போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர், சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம், 'உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்' என்ற பட்டத்தை வசப்படுத்தினார்.
டில்லி பல்கலையின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில், கணிதம் (ஹானர்ஸ்) பயின்று வருகிறார். தனது விரைவான கணித கணக்கீடுகளுக்காக, 50 லிம்கா உலக சாதனைகளையும் படைத்துள்ளார். பானு பிரகாஷ் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகையில், 'அவரது மூளை ஒரு கால்குலேட்டரின் வேகத்தை விட, விரைவாக கணக்கிடும் திறன் கொண்டது' என தெரிவித்துள்ளது. இந்த சாதனைகளை ஸ்காட் பிளான்ஸ்பர்க் மற்றும் சகுந்தலா தேவி போன்ற கணித மேதைகள் மட்டுமே வைத்திருந்தனர். தற்போது பானு பிரகாஷ் இச்சாதனையை படைத்துள்ளார்.
இப்போட்டியில் 2வது மற்றும் 3வது இடங்களை பெற்ற போட்டியாளர்களை விட, பானு பிரகாஷ் 65 புள்ளிகள் முன்னிலையில் இருந்துள்ளார். போட்டியில், நீதிபதிகளிடம் தனது துல்லியத்தை வெளிப்படுத்த, மேலும் சில கணக்கீடுகளையும் செய்து அசத்தியுள்ளார். கணக்கில் ஆர்வமுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் பயன்பெறும் வகையில், 'விஷவ் மேத்' லேப் (Vision Math lab) உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.
AthibAn Tv