மோசமான சூழலிலும் விமானப் போரை வழி நடத்துவதற்காக 'அவாக்ஸ்' எனப்படும் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை, இஸ்ரேலிடமிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா வாங்க உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பிப்., 26ல் இந்திய விமானப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து பாலக்கோட்டிலிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. அதன் பின் ஏற்பட்ட வான்வழி சண்டையில் இந்திய விமானப் படை கமான்டர் அபிநந்தனின் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்துப்பட்டது. அப்போது தான் அவாக்ஸ் ரேடாரின் தேவை முதலில் உணரப்பட்டது. பாக்., தங்கள் வான் பரப்பில் ஊடுருவலை கண்டுபிடிக்கவும், விரட்டியடிக்கவும் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட, 2 அவாக்ஸ் ரேடார்களுடன், 24 மணி நேரமும் பறந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் தற்போது சீனா அத்துமீறி லடாக்கில் ஊடுருவுவ முயல்வதும், உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் பழைய நிலை தொடர தயக்கம் காட்டுவதுமாக உள்ளது. எனவே வான்வழி கண்காணிப்பின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அதி நவீன வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளான 'அவாக்சை' இந்தியா கூடுதலாக 2 வாங்க உள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே, விமானத்தின் மீது 360 டிகிரி ரோட்டோ டோம் பொருத்தப்பட்ட 3 ஃபால்கான் அவாக்ஸ் ரேடார்களும், 240 டிகிரி ரோட்டோ டோமுடன் 'டிஆர்டிஓ' தயாரித்த 2 அவாக்ஸ் ரேடார்களும் உள்ளன. இந்த அவாக்ஸ் ரேடார்கள் சீனாவிடம் 28 மற்றும் பாகிஸ்தானிடம் ஏழு உள்ளன.
'இந்த ரேடார்களை வாங்க உடனடியாக ஒப்புதல் கேட்டு பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவை இரண்டாவது முறையாக அணுகியுள்ளனர். முதல் முறை அளிக்கப்பட்ட திட்டங்களில் சில விளக்கங்கள் கேட்டு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் திருப்பி அனுப்பினர். தற்போது உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் ரேடார்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும். இஸ்ரேலில் ஒருங்கிணைக்கப்படும் இந்த வான்வழி கட்டுப்பாட்டு அமைப்பு, முழுமையாக கிடைக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்' என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
AthibAn Tv