இணையதள தகவல் களஞ்சியமான, 'விக்கிபீடியா' இந்திய பயனாளிகளிடம், தர்மசங்கடமான ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு, குறைந்தபட்சம், 150 ரூபாய் நன்கொடை அளிக்கும்படி, அது கோரியுள்ளது.
எந்தத் தகவல் வேண்டு மானாலும், இணையதள தகவல் களஞ்சியமான, விக்கிபீடியாவில் பெற முடியும். 'கூகுள்' இணையதளத்தில் எந்தத் தகவலை தேடினாலும், 90 சதவீதம் அதில் முதலில் இருப்பது, விக்கிபீடியா அளிக்கும் தகவலாகத் தான் இருக்கும். உலகெங்கும், விக்கிபீடியாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. கடந்த, 2019ம் ஆண்டில் மட்டும், 77.10 கோடி தகவல்களை இந்தி யர்கள் பெற்றுள்ளனர்.
உலக அளவில், அதிகமானோர் பார்த்ததில், ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.அதேபோல், உலக அளவில், மிகப் பெரிய இணையதளங்களில், ஏழாவது இடத்தில் விக்கிபீடியா உள்ளது. இந்த இணையதளம் இலவசமாக தகவல்களை தருகிறது.அதில் விளம்பரங்களும் கிடையாது. இந்நிலையில், விக்கிபீடியா தகவலை தேடும்போது, அதில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:
இது சற்று தர்மசங்கடமாகத் தான் உள்ளது. எங்களுடைய சேவையைத் தொடர, சிறிய அளவிலான நன்கொடையை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். விக்கிபீடியாவை பயன்படுத்துவோரில், 98 சதவீதம் பேர், இதை செய்வதில்லை.உங்களால் முடிந்தது, குறைந்தபட்சம், 150 ரூபாயை நன்கொடையாக அளியுங்கள். இது, எங்களுடைய நிறுவனம், நீண்ட நாள் நீடித்த சேவையை மக்களுக்கு அளிக்க பெரிய உதவியாக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், 2015லும், பயனாளிகளிடம் நன்கொடை அளிக்கும்படி, விக்கிபீடியாவை நடத்தும் விக்கிமீடியா அறக்கட்டளை கேட்டிருந்தது. ஊழியர்களுக்கு சம்பளம், இணையதள பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு இந்த நிதி உதவும் என, அந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
AthibAn Tv