உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், கூகுள், பேஸ்புக், ஆப்பிள் ஆகியவற்றின் தலைவர்கள் தங்களது நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க, வாஷிங்டன் சட்ட உறுப்பினர்கள் முன் ஆஜராகினர்.
'யெல்ப்' போன்ற சிறு நிறுவனங்களிடம் இருந்து, தரவுகள் மற்றும் உள்ளடக்கங்களைத் திருடுவதாக, கூகுள் மீது அமெரிக்க சட்ட உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால், 'பயணாளர்கள் வேறு தளங்களுக்கு செல்லாமல், தங்கள் தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, கூகுள் நினைப்பதாகக் கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனம் விற்பனையாளர்களை நடத்தும் விதம்; இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்களை பேஸ்புக் வாங்கியது; ஆப்பிள் ஆப் ஸ்டோர் விவகாரம் என, இந்நான்கு நிறுவனங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி கடந்த ஓராண்டாக விசாரணை நடத்துகிறது. விசாரணைக் கமிட்டிக்கு தலைமை தாங்கும் ஜனநாயகவாதி டேவிட் சிசிலின் தெரிவித்துள்ளதாவது:
ஓராண்டாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஆன்லைன் தளங்கள் தங்கள் நிறுவனத்தை விரிவாக்க எவ்வாறு தங்கள் அதிகாரத்தை தீய வழிகளில் பயன்படுத்தினார்கள் என்பது தெரிய வந்துள்ளது.இந்நிறுவனங்கள் ஏகாதிபத்ய போக்கோடு செயல்பட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு, ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காணொளி வாயிலாக ஆஜர் ஆன, பேஸ்புக்கின் மார்க் சூக்கர்பர்க், அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், கூகுள் நிறுவன சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் ஆகியோர், 'சிறு தொழில்கள் வளர எங்கள் நிறுவனங்கள் உதவியாக உள்ளன. ஆரோக்கியமான முறையில் தான் போட்டியிடுகிறோம்' எனத் தெரிவித்தனர்.
மேலும், தற்போதைய தொழில் சூழல் குறித்து, 'ஸ்மார்ட்போன் தொழில்சந்தை மிகவும் போட்டி நிறைந்ததாகவுள்ளது. பங்கு சந்தைகளுக்காக தெருவில் இறங்கி சண்டை போடுவதுபோல் உள்ளது' என, ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் தெரிவித்தார்.
அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், 'தங்கள் தளத்தில் விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை தரவை கையாளுவதை நிறுவனம் மதிப்பாய்வு செய்வது உண்மைதான்' என, ஒப்புக்கொண்டார். 'அத்தரவுகளை வைத்து நன்றாக விற்பனையாகும் பொருட்களை அமேசானே தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்துகிறது' என, அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
'பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன என, அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டாலும். இந்நிறுவனங்கள் மீது தற்போது அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை' என, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
AthibAn Tv