எல்லையில் இந்திய - சீன ராணுவ மோதலுக்கு முன்னாள் பிரதமர் நேருவும், காங்கிரசும் தான் பொறுப்பு என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடந்த பாஜ., பேரணியில் காணொலி மூலம் போபாலில் இருந்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: காங்கிரசிலிருந்து வந்த எந்த பிரதமரும் கிழக்கு லடாக் எல்லையில் துணிச்சலாக சாலை அமைத்தது கிடையாது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் சாலை அமைத்து வருகிறது. இதைப் பார்த்துத்தான் சீனா ஆத்திரப்படுகிறது. மோடி தலைமையில் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வந்தால், தன்னை எப்படியும் வளர்ச்சியில் முறியடித்துவிடும் என்று சீனா அஞ்சி, இதுபோன்ற எரிச்சலூட்டும் பணியில் ஈடுபடுகிறது.
இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்த நினைத்தால், 130 கோடி மக்களும் சேர்ந்து சீனாவை அழித்து விடுவார்கள் என எச்சரிக்கிறோம். கடந்த 1962ம் ஆண்டில் இருந்தது போன்று இந்தியா இப்போது இல்லை என்பதை சீனா கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா தற்போது மோடி தலைமையில் இருக்கிறது. ஆத்திரமூட்டும் செயலையும், அத்துமீறலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என அவர் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.
கடந்த 1962ல் சீனா நமது எல்லைக்குள் நுழைந்தது தெரியாமல் அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி. 1962 போரில் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நேரு, ஒரு புல்கூட வளராத அந்த நிலைத்தை வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்றார். அதற்கு அந்த எம்.பி., உங்கள் தலையில் ஒன்றும் வளராது என்பதற்காக அது எதற்கும் உதவாது என நினைத்து தூக்கி வீசிவிடலாமா என்று கேட்டார். நமது புனித நிலம் குறித்த நேருவின் பேச்சும், காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும் இதன் மூலம் அறியலாம்.
இந்தியா-சீனா ராணுவப் பிரச்னைக்கு தொடக்கமாக இருந்தது காங்கிரசும், முன்னாள் பிரதமர் நேருவும் தான். அவர்கள் தான் பொறுப்பு. ஆனால் இந்த பிரச்னைக்கு மோடி நிரந்தரமான தீர்வு காண்பார். கடந்த 2005-06ம் ஆண்டு ராஜிவ் அறக்கட்டளை, சீனாவிடம் இருந்து நன்கொடைகளைப் பெற்றுள்ளது. சீனாவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான தொடர்பு குறித்து சோனியா விளக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் தவறுக்காக சீனா 43 ஆயிரம் சதுர கி.மீ பரப்பை ஆக்கிரமித்துள்ளது. தேசத்திடம் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல், எல்லை குறித்து பேசும் பேச்சு அனைத்தும் ராணுவத்தின் மனவலிமையை குலைக்கும் விதத்தில் இருக்கிறது. அந்த பாவத்தை காங்கிரசும், ராகுல் செய்கிறார்கள். எப்போது ராகுலுக்கு நல்ல புத்தி கிடைக்கும். ராகுல் பேசுவதைப் பார்த்தால் அவரின் வயதுக்கும், அறிவுக்கும் தொடர்பில்லாமல் பேசுகிறார். இதுபோன்ற தலைவர் கிடைத்தது காங்கிரசின் துரதிர்ஷ்டம். ராகுலையும், அவரின் கட்சியையும் தேசம் மன்னிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
AthibAn Tv