இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போரை மக்கள் முன்னெடுத்து செல்கின்றனர் என இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மருந்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மருந்துவர்கள் கூட்டமைப்பில் (ஏஏபிஐ) காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவில் உள்ள 80 ஆயிரம் இந்திய மருத்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த அமைப்பின் நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் ஒருவர் பேசுவது இதுதான் முதல் முறையாகும்.
நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரானப் போரை மக்கள் முன்னெடுத்து நடத்துகிறார்கள். கொரோனா வைரஸ் பரவலைக் வெற்றிகரமாக நாங்கள் கட்டுப்படுத்தியதற்கு சரியான நேரத்தில் ஊரடங்கை கொண்டுவந்தது தான் காரணம் என்று நினைக்கிறேன்.
கொரோனாவை கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கை நாங்கள் தற்சார்புப் பொருளாதாரம் கொண்டதாக மாற்றும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டுள்ளோம். உலகில் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் கொரோனா வைரசை இந்தியா சிறப்பாகக் கையாண்டுள்ளது. அமெரி்க்காவில் 10 லட்சம் பேருக்கு 350 பேரும், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் 10 லட்சம் பேருக்கு 600 பேரும் கொரோனாவால் உயிரிழந்தார்கள். ஆனால் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 12 பேர் என்ற வீதத்தில் தான் உயிரிழப்பு இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கொரோனாவுக்கு எதிரானப் போரில் சிறப்பாகச் செயல்பட்டு, பரவலைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்பையும் குறைத்துள்ளது
உலகின் 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாது. கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் நெருக்கம், மத வழிபாடுக் கூட்டம், அரசியல் கூட்டம், மக்கள் இடம் விட்டு நகர்தல் போன்றவை அனைத்தும் மக்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த மருத்துவ வல்லுநர்கள் இந்தியாவில் கொரோனா வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என அச்சப்பட்டார்கள். ஆனால், சரியான நேரத்தில் நாங்கள் ஊரடங்கை அமல்படுத்தி, லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காத்துள்ளோம்.
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய நேரத்தில் ஒரு கொரோனா பரிசோதனை மையம்தான் இருந்தது. ஆனால் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனை மையங்கள் உள்ளன. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான பிபிஇ ஆடைகள் பெரும்பாலும் இறக்குமதி செய்துவந்தோம், ஆனால் இப்போது அனைத்தையும் உள்நாட்டில் தயாரிக்கிறோம், ஏற்றுமதியும் செய்கிறோம். வாரத்துக்கு 30 லட்சம் என்95 முகக்கவசம் உற்பத்தி செய்கிறோம். 50 ஆயிரம் புதிய வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக இருக்கிறது, அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர்கள் அங்கு சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பங்கு அளப்பரியது என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
AthibAn Tv