'மும்பை தாக்குதல் வழக்கில் கைதான, பயங்கரவாதி தஹவூர் ராணாவை, நாடு கடத்தலாம்; ஆனால், டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது' என, அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த, 2008ல், மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் உயிரிழந்தனர். லஷ்கர் - இ - தொய்பா, ஹர்கத் - உல் - ஜிஹாத் - இ - இஸ்லாமி பயங்கரவாத அமைப்புகளின் இந்த சதி திட்டத்திற்கு, அமெரிக்காவில் வசிக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த, டேவிட் ஹெட்லி, தஹவூர் ராணா உதவியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கில், 'அப்ரூவர்' ஆக மாறிய, டேவிட் ஹெட்லிக்கு, 35 ஆண்டுகள்; தஹவூர் ராணாவுக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்ட, ராணாவை, பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாடு கடத்துமாறு, அமெரிக்காவை, இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து, ராணா மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர், ஜாமின் கோரி, லாஸ் ஏஞ்செல்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''கனடா குடியுரிமை பெற்ற தஹவூர் ராணாவுக்கு ஜாமின் வழங்கினால், அவர், தப்பிச் சென்று விடுவார்.''அதனால் நாடு கடத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், ஜாமின் வழங்கக் கூடாது,'' என, துணை அட்டர்னி ஜெனரல், ஜான் லுலிஜியன் வாதாடினார்.
அப்போது, ராணாவின் வழக்கறிஞர், ''டேவிட் ஹெட்லியை நாடு கடத்தாமல், ராணாவை மட்டும் இந்தியாவுக்கு அனுப்புவது சட்டப்படி செல்லாது என்பதால், ஜாமின் வழங்கலாம்,'' என்றார். இதற்கு, ''டேவிட் ஹெட்லி குற்றத்தை ஒப்புக் கொண்டார், ஆனால், ராணா, கடைசிவரை குற்றத்தை மறுத்து, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார். அதனால், ராணாவை நாடு கடத்தலாம்.
''ஹெட்லிக்கு அளித்த வாக்குறுதிப்படி, அவரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது,'' என, ஜான் லுலிஜியன் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் தள்ளி வைத்தார்.
AthibAn Tv