சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு பரிந்துரையா? இல்லையா? - மருத்துவ குழு பதில்
கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார். அந்த வகையில் நாளை (ஜூன் 30) ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளோம். கடந்த 2 வாரங்களை பார்க்கையில் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதனால் அங்கு பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். சென்னையில் சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும். சென்னையில் தினமும் 10 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது. சோதனைகள் அதிகரித்தால் தான் பாதிப்பு எண்ணிக்கை உயருகிறது. சோதனைகள் அதிகரிப்பதால் பாதித்தோரை வேகமாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த முடிகிறது.
இதனால் மற்றவர்களுக்கு பரவுதலையும் தடுக்க முடிகிறது. இந்தியாவிலேயே அதிக சோதனைகள் தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளன. மேலும், இறப்பு விகிதமும் இங்கு தான் குறைவாக உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல, அது மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது. அனைத்து மாவட்டங்களிலும் நீட்டிப்பு தேவையில்லை. பொது போக்குவரத்தை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும் என பரிந்துரைத்தோம். ஏனெனில் பொது போக்குவரத்தால் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களை விட 30 சதவீதம் படுக்கை வசதி அதிகமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 80 சதவீதத்தினருக்கும் மேலானவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. அதனால் பயம் வேண்டாம். சுவை, மணம் தெரியவில்லை எனில் காய்ச்சல் மையத்திற்கு சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மாஸ்க் அணியாமல் வெளியே வராதீர்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
AthibAn Tv