எல்லைக்கு அருகில், சீனாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தென்படுவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக் எல்லைக்கு ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. கடந்த, ஆறு வாரங்களுக்கு மேலாக, இரு தரப்பு ராணுவமும் எல்லையில் முகாமிட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்ள, இரு தரப்பு பேச்சில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சீன எல்லையில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரோந்துப் பணியில் ஈடுபடுவதாக, சீனா கூறி வருகிறது.இதற்கிடையே, சீனா ஏதாவது விஷமத்தனமாக செயல்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகள், லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளன.நம் விமானப் படை, ராணுவத்தின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், எல்லையில், தீவிர கண்காணிப்பும் தொடர்கிறது.நம் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றால், அதை உடனடியாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் ரஷ்யா சென்ற, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய அரசுடன் பேச்சு நடத்தினார். அப்போது, ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, அதி நவீன, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை மிக விரைவில் அனுப்புவதாக, ரஷ்யா உறுதி அளித்துள்ளது. அது வந்தால், அதையும் எல்லையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
AthibAn Tv