'லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்ததுடன், இந்திய ராணுவத்தினரை தாக்கிய விபரீத விளையாட்டுக்கு, சீனா பல தலைமுறைகளுக்கு மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும்' என, நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சீனாவின் தலைகனம்
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. சீன ராணுவம் தாக்கி, நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் பலியானதால், இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, நம் ராணுவத்தின் முன்னாள் துணைத் தலைமை தளபதி, லெப்டினென்ட் ஜெனரல், குர்மித் சிங் கூறியதாவது:
கிழக்கு லடாக்கில், சீன ராணுவம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதன் மூலம், அந்நாடு மிகப் பெரிய தவறை செய்துவிட்டது.உலக நாடுகள், கொரோனா வைரஸ் பிரச்னையில் திண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில், இந்த நடவடிக்கையின் மூலம், சீனாவின் உண்மையான முகம் உலக நாடுகளுக்கு தெரிய வந்துள்ளது.
தென் சீன கடல் பகுதியில் ஆக்கிரமிப்பு, ஹாங்காங்கில் அடக்குமுறை என, சீனாவின் மோசமான முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுடன், வர்த்தகம் தொடர்பான பிரச்னையில் சீனா சிக்கியுள்ளது. தற்போது இந்த தாக்குதலால், இந்தியா மற்றும் உலக நாடுகளின் நல்லிணக்கத்தை அது இழந்து விட்டது.
துாதரக உறவு, வர்த்தகம் என, பல முனைகளில், இதற்கான மிகப் பெரிய விலையை சீனா, அடுத்த பல தலைமுறைகளுக்கு தர வேண்டியிருக்கும்.நம் ராணுவத்தினரை தாக்கியதன் மூலம், சீன ராணுவம், ஒரு அரசியல் அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
நம் ராணுவத்தின் முன்னாள் துணை தலைமை தளபதியான, லெப்டினென்ட் ஜெனரல், சுப்ரதா சாஹா கூறியதாவது: சீனா தற்போது உலகளவில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது; ஒரு மூலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தன் ராணுவ பலத்தை வைத்து, சீனா, விபரீத விளையாட்டில் இறங்கியுள்ளது. தென் சீன கடல் பகுதி ஆக்கிரமிப்பால், பல நாடுகளின் விரோதத்தை சம்பாதித்தது. தற்போது, நம் நாட்டின் மீது கை வைத்துள்ளதன் மூலம், உலக நாடுகளுடன் உள்ள நல்லுறவை இழந்து வருகிறது.
பொருளாதார மிகப்பெரிய பாதிப்பு
இனி சீனாவுடன், எந்த நாடும், நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளாது. அமெரிக்கா உடனான வர்த்தகப் போர், சீனாவின் பொருளாதார அழிவுக்கு வழிவகுத்து விடும். தன் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளால், அடுத்த பல தலைமுறைகளுக்கு, சீனாவால் எழுந்திருக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.
AthibAn Tv