கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் தயாராகி வரும் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையினை உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தலைநகர் டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், நோய் பரவல் பற்றி ஆராய மக்களிடையே ரத்ததில் ஆன்டிபாடிகளை கண்டறியும் சீராலஜி பரிசோதனையை டில்லி அரசு துவக்கியுள்ளது.
மற்றொரு பெரிய முயற்சியாக தெற்கு டில்லியின் சத்தர்பூர் பகுதியில் சர்தார் படேல் கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனையை அமைத்து வருகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தோ திபெத்திய எல்லை காவல்துறை நிர்வாகம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 27) அந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
ராதா சோமி சத்சங் பியாஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு மருத்துவமனை இரண்டு பிரிவுகளை கொண்டது. கொரோனா பராமரிப்பு மையத்தில் அறிகுறி அற்ற கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவார்கள். மருத்துவமனையில் அறிகுறி உள்ள நோயாளிகள் சிகிச்சை பெறுவார்கள். தற்போது 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அவை திங்களன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AthibAn Tv