சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதல்வர் பழனிசாமி, தெரிவித்தார். இந்த தகவலை மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிப்போம் என்றார். இதற்கிடையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு காலத்தில், குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். பின்னர், கடுமையாக தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்கு கொண்டு செல்லபட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.தந்தை, மகன் மரணத்திற்கு பல தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ரஜினி ஆறுதல்
ஜெயராஜ் மனைவி மற்றும் மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். இதனை, கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.
மாஜிஸ்திரேட் விசாரணை
இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன்படி, மாஸ்திரேட் விசாரணை துவங்கியது. சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில், குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் நேரில் விசாரித்து, போலீஸ் ஸ்டேசனில் என்ன நடந்தது என்பது குறித்து ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.
சஸ்பெண்ட்
இந்நிலையில், சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக வடசேரி போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக பெர்னார்டு சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஐகோர்ட் அனுமதி பெற்று
இன்று நிருபர்களை சேலத்தில் சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தப்படும். ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி பெற்று, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்படும். பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
AthibAn Tv