ஜூன் இறுதியில் நடைபெற இருந்த ஜி-7 நாடுகள் மாநாட்டை செப்., மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளும் அழைக்கப்பட வேண்டும் என கூறினார்.
உலகின் பெரிய பொருளாதாரத்தை கொண்ட, வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஜி-7 மாநாடு, ஜூன் 10 முதல் 12ம் தேதி வரை அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று, பொருளாதார பிரச்னைகள், வர்த்தகம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும். ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், ஜூன் மாத இறுதியில் மாற்றப்பட்டிருந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று குறையாத வரையில், ஜி-7 மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார். இது குறித்து வெள்ளை மாளிகையின் தகவல்தொடர்பு இயக்குநர் அலிசா அலெக்சான்ட்ரா பாரா கூறுகையில், ‛ஜி-7 நாடுகள் மாநாட்டில் பாரம்பரிய உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளும் அழைக்கப்படும். சீனாவுடன் எதிர்காலத்தில் எவ்வாறு அணுகுவது என்பது குறித்து இந்த மாநாட்டில் பேசப்படும்,' எனத் தெரிவித்தார்.
AthibAn Tv