Type Here to Get Search Results !

தமிழகத்திலும் 5.0 ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை

To all the people of the country Plain mold Good day of ...

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றுடன்( மே 31) முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்தது. இதனடிப்படையில், தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்

* வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்
* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா செல்லவும் தடை

* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத்துறை, காவல்துறை, அரசு அலவலர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைபடுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு

* வணிக வளாகங்களுக்கு தடை நீடிக்கிறது

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு திறக்கக்கூடாது. இந்நிறுவனங்கள் ஆன்லைன் வழி கல்வி கற்றல் தொடரலாம். அதனை ஊக்கப்படுத்தலாம்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை நீடிக்கும்

*மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் சேவை கிடையாது

* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை

* மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து

மேற்கண்ட கட்டுப்பாடுகள், தொற்றின் தன்மைக்கு ஏற்ப படிப்படியாக தளர்வு அளிக்கப்படும்.

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடு


* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

பஸ் போக்குவரத்து

மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைபடுத்த தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.

மண்டலம் -1: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
 
மண்டலம்- 2: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் -3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் -4: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம்-5: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்

மண்டலம்-6: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம்- 7: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம்- 8: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படும்.
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் போக்குவரத்திற்கு தடை தொடரும்

* அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பஸ்களும் இயங்க அனுமதி

* பஸ்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

* மண்டலங்களுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ - பாஸ் தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் இ-பாஸ் தேவையில்லை

* அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான பஸ் போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

* அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற பஸ்கள் இயக்கப்படும்


இ -பாஸ் முறை

*அனைத்து வகையான வாகனங்களுக்கும் மண்டலங்களுக்குள் இயங்க அனுமதிக்கப்படும். அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை

* வெளி மாநிலத்திற்கு செல்லவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரவும், மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும் இ - பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
 

2. சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு ஜூன் 1 முதல் அனுமதி

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்கவிக்க வேண்டும்

* வணிகவளாகங்கள் தவிர்த்து அனைத்து பெரிய கடைகள் (நகை, ஜவுளி) மற்றும் ஷோரூம்கள்
50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் ஏசி இயக்கப்படக்கூடாது.

* மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும். அங்கு ஏசி இயக்கக்கூடாது

* டீக்கடைகள், உணவு விடுதிகள்( ஜூன் 7 வரை பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.

* மத்திய அரசு உத்தரவுப்படி ஜூன் 8 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீதம் அளவு மட்டும் வாடக்கையாளர் அமர்ந்து தேநீர் அருந்தலாம்.
* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே மண்டலத்தற்குள் இ பாஸ் இன்றி பயன்படுத்தலாம்

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது

* சலூன்கள் மற்றும்அழகுநிலையங்களில் ஏசியை பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

3. சென்னை போலீஸ் துறை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில்( நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில்) 1ம் தேதி முதல் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி

* தொழில் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் 20 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்

* வணிகவளாகங்கள் தவிர்த்து அனைத்து பெரிய கடைகள் (நகை, ஜவுளி) மற்றும் ஷோரூம்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள மட்டுமே கடைக்குள் இருக்கும் பொருட்டு , தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில் ஏசி இயக்கப்படக்கூடாது.

* டீ கடைகள், உணவு விடுதிகள்( ஜூன் 7 வரை பார்சல் மட்டும்) காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படாம்.

*மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும். அங்கு ஏசி இயக்கக்கூடாது

*ஜூன் 8 முதல் டீ கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது.

* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பேருடன் இயங்கலாம்

* ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகறது. சைக்கிள் ரிக்ஷாவும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பொதுவான விதிமுறைகள்

* குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 ன் கீழ் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடரும்
* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* அனைத்து, தொழில் மற்றும் வஙணக நிறுவனங்கள் தங்களதுஊழியர்கள் மற்றும் பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* பொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால், அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் கட்டட பணியாளர்கள், இந்நோய் தொற்றை தடுக்கும் வகையில், அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளிநபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
 
சிறப்பு மதிப்பூதியம்

சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றி வரும் சுமார் 33 ஆயிரம் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களின் சேவையை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கம் 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

ஆயிரம் ரூபாய் நிவாரணம்

சென்னையில், மாநகராட்சி பகுதியில், ஏழைகளின் வாழ்விடங்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில உள்ளது. எனவே, ஒர நோய் பரவல் தடுப்பு பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக சென்னை குடிசை பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் மற்றும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைபடுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாளாவது தங்க வைத்து அவர்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய் பரவல் தடுக்கப்படும். அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் அவர்கள், முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது, தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம் நிவாரணம் வழங்கப்படும்.

மக்கள் ஒத்துழைப்பு தேவை

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம். வீட்டிலும், அலுவலகத்திலும் கட்டாயம் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom