நாளையுடன் (மே 31) 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவிக்க உள்ளது. ஆனால் குறிப்பிட்ட 13 பெருநகரங்களில் கடும் விதிமுறைகள் மற்றும் கண்காணிப்புகள் தொடரும் என்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி மார்ச் 24-ம் தேதி மூன்று வார காலத்திற்கான முதல் ஊரடங்கை அறிவித்தார். பின்னர் ஏப்ரல், மே 3 மற்றும் கடைசியாக மே 17-ம் தேதி இவை நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஊரடங்குகளில் அத்யாவசிய வணிகங்கள் மட்டுமின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பிற கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் நாளையுடன் 4-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது.
5-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கெளபா தலைமையில் ஒரு கூட்டமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மற்றொரு கூட்டமும் 28ம் தேதி நடைபெற்றது. இதில் மாநிலங்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் அளிக்கவும், அதே சமயம் மத்திய அரசின் குறிப்புகளை பின்பற்ற வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளனர். நகர்ப்புற குடியிருப்புகளில் கொரோனாவை நிர்வகிக்க வீட்டுக்கு வீடு கண்காணிப்பு போன்ற வழிகாட்டுதல்களை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 13 பெருநகரங்களின் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. இங்கு தான் இந்தியாவின் 70% கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் தமிழ்நாடு மூன்று நகரங்களை கொண்டுள்ளது. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்களில் இந்த 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் தொடரும். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு இதில் உள்ளன. இது தவிர்த்து மும்பை, டில்லி, ஆமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கோல்கட்டா மற்றும் அதை ஒட்டிய ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகியவை அந்த 13 நகரங்கள் ஆகும்.
AthibAn Tv