உலகப்புகழ் பெற்ற ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழா வரும் 23ம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: ஒடிசா மாநிலத்தில் ஸ்ரீ ஜெகந்நாத் கோவில் நிர்வாக குழு கூட்டம் தலைவர் கஜபதி மகாராஜா திப்யசிங் தேப் தலைமையில் நடைபெற்றது. கூட்டதிற்கு பின்னர் வீடியோ கான்பரன்சிங்முறையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும் ஜெகந்நாதர் கோவில் திருவிழா வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் கோவில் திருவிழாக்கள் அனைத்தையும் டி.வி.யில் நேரலையாக காண்பிக்கும் படி மாநில அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இல்லாமல் ரத யாத்திரை நடத்த அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு தான் இறுதி முடி வு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் ஆண்டு தோறும் புதிய மரத்தில் செய்யப்படும் தேர்களை போன்று இந்தாண்டும் புதிய மரங்களில் இருந்து தேர்களை உருவாக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் பூரி நகர மக்கள் கூட கலந்து கொள்ளக் கூடாது. மேலும் ரத யாத்திரை நிறைவடையும் வரையில் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவதை தடை செய்ய கோவில் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் வழக்கமான நிகழ்ச்சிகள் கோவிலுக்குள் நடைபெறும் என கோவில் நிர்வாக குழு தலைவர் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே மாநில அரசின் சார்பில் கிழக்கு கடற்கரை ரயில்வேயிடம் பூரி நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இது குறித்து கிழக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில் மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க வரும் ஒன்றாம் தேதி பூரியில் இருந்து துவங்கப்படும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில் புவனேஸ்வரில் இருந்து இயக்கப்படும். அதே போல் சீல்டா -பூரி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படும் என தெரிவித்தார்.
AthibAn Tv