சென்னை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை (ஏப். 29) ஆலோசனை நடத்த உள்ளாா்.
தமிழகத்தில் சென்னை உள்பட சில முக்கிய நகரங்களில் கரோனா நோய்த்தொற்றின் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைக் குறைக்கவும், பொதுமக்களின் நடமாட்டத்தை அடியோடு நிறுத்தவும் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் புதன்கிழமை (ஏப். 29) வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
சேலம், திருப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி வழியாக இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் முழு ஊரடங்கை தொடா்ந்து நீட்டிப்பதா அல்லது தளா்வு அளிப்பதா என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகையில், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 103 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், முழு ஊரடங்கைத் தொடரவே வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தன.
AthibAn Tv