கொரோனா வைரஸ் தொற்றால் மற்ற நாடுகளை விட, அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்து வருகிறது அமெரிக்கா. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா விவகாரத்தில் சீனா மீது கடுமையான விமர்சனங்களையும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறி வருகிறார். மேலும், அமெரிக்கா சார்பில், கொரோனா பாதிப்புக்கு பல டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டஈடு கேட்டு, சீனா மீது இரு வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (29ம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், 'அமெரிக்காவில் வரும் நவ., மாதத்தில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கும். அதற்கு கொரோனா தொற்று பரவலை சீனா கையாண்ட விதமே சாட்சி. சீனா மீது வர்த்தக போரை தொடுத்ததால், என்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என சீனா விரும்புகிறது. சீனா பல விதமான எதிர்வினைகளை சந்திக்க இருக்கிறது. என்னால் பல காரியங்களை செய்ய முடியும்' எனக் கடுமையாகப் பேசியுள்ளார்.
சீனா மீது டிரம்ப் வைத்துள்ள இந்த நேரடிக் குற்றச்சாட்டுக்குள் குறித்து, சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 'கொரோனாவால் நாட்டு மக்கள் அதிகப்படியாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், தனது அரசியல் வாழ்க்கை குறித்து மட்டுமே டிரம்ப் கவலைப்படுகிறார். இது மிகவும் அபத்தமாகும்' என, பல்வேறு தரப்பினரும் டிரம்ப்பை விமர்சித்து வருகின்றனர்.
AthibAn Tv