அமெரிக்க அதிபர் டிரம்பின் வெளிநாடு பயணங்களின் போது, அவரை வரவேற்கும் நாட்டின் தலைவர்களின் டுவிட்டர் கணக்கை, சில காலங்களுக்கு மட்டும் ' Follow' செய்யும் நடைமுறையை கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தயாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் ஆகியோரின் டுவிட்டர் கணக்கை வெள்ளை மாளிகை பாலோ செய்தது. வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையை, இந்திய - அமெரிக்க நட்பின் உதாரணம் என்று பா.ஜ.,வினர் பெருமையாக குறிப்பிட்டனர். ஏனென்றால், அப்போது வெள்ளை மாளிகை அமெரிக்காவுக்கு வெளியே வெளிநாட்டு தலைவர்களில் பிரதமர் மோடியை மட்டும் தான் பின் தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட இந்தியா தொடர்பான ஆறு டுவிட்டர் கணக்குகளையும் வெள்ளை மாளிகை 'Unfollow' செய்தது. மத சுதந்திரத்தில் கவலை அளிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை அமெரிக்கா சேர்த்ததால் தான் அன் பாலோ செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் விவாதம் நடந்தது. இச்செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கூறிய ராகுல், வெளியுறவு அமைச்சகம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “வெள்ளை மாளிகை பொதுவாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளை மட்டுமே பின் தொடரும். அதிபரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது, குறுகிய காலத்திற்கு மட்டும் அவரை வரவேற்கும் நாட்டினுடைய அதிகாரிகளின் டுவிட்டர் கணக்குகளை பின் தொடரும். சுற்றுப்பயணத்தின் போது வெளியாகும் செய்திகளை மறு டுவீட் செய்து, வருகைக்கு ஆதரவு தெரிவிக்க அவ்வாறு செய்யப்படும்.” என விளக்கமளித்துள்ளார். வெள்ளை மாளிகை நீண்டகாலமாக டிரம்ப், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான மெலானியா, துணை ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் கணக்குகளை மட்டும் பின் தொடர்கிறது.
AthibAn Tv