இந்தியாவில், ஊரடங்கு உத்தரவால், தினமும், 35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச், 25ல் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த, 34 நாட்களில், ஊரடங்கால், தினமும், 35,000 கோடி முதல், 40,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10 லட்சம் கோடி முதல் 12 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சுய தொழில் புரிவோர், சாதாரண பணியாளர்கள், தினக் கூலிகள் உள்ளிட்ட, 37.30 கோடி தொழிலாளர்களுக்கு, தினமும், 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்களுக்கு, இதுவரையிலான ஊரடங்கு காலத்தில், 4.05 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
'தற்போதைய ஊரடங்கு, 10 வாரங்களை கடந்தால், இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரம் பாழாகி விடும்' என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். நடப்பாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, அனைத்து தர நிர்ணய நிறுவனங்களும் குறைத்துள்ளன.
மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, 2.5 சதவீதத்தில் இருந்து, 0.2 சதவீதமாக குறைத்துள்ளது. இது, 29 ஆண்டுகளுக்குப் பின் நேரும், 1 சதவீதத்திற்கு உட்பட்ட வளர்ச்சியாக இருக்கும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல, பிட்ச் நிறுவனமும், நடப்பு, 2020- - 21ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை, 0.8 சதவீதமாக குறைத்துள்ளது.
உலக வங்கி, நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம்,1.5 - 2.8 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும் என, தெரிவித்துள்ளது. அதேபோல, சர்வதேச நிதியம், 1.9 சதவீதம் என்ற அளவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என, மதிப்பிட்டுள்ளது.
AthibAn Tv