லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 28 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரம் தற்காப்பு கவசங்கள் வாங்குகிறது அந்த மாநில காவல்துறை.
முன்னதாக, 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் உடல் நலக் குறைபாடு உள்ள காவலர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பணியில் இருக்கும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு கவசங்களை வாங்க உத்தரப்பிரதேச காவல்துறை முடிவு செய்துள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிக் கொள்ளுமாறு காவல்துறை இயக்குநர் ஹிதேஷ் சந்திரா அவாஸ்தி, மாவட்ட காவல்துறை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
வியாழக்கிழமை வரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் 28 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 10 ஆயிரம் தற்காப்பு கவசங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் தற்போது வரை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை மட்டுமே கிடைத்துள்ளது.
மாவட்ட அளவில் மீதமுள்ள 6 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
AthibAn Tv