எதிர்காலத்தில் உருவாகும் புயல்களுக்கான, 169 பெயர்களை, 13 நாடுகள் அடங்கிய குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.
வடக்கு இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் ஆகியவற்றில், எதிர்காலத்தில் உருவாகும் புயல்களுக்கு, பெயர்களை தேர்வு செய்ய, அப்பகுதி நாடுகளைச் சேர்ந்த வானிலை ஆய்வு மையங்கள் அடங்கிய குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, 2018ல், இந்தியா, வங்கதேசம், ஈரான், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை,தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய, 13 நாடுகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்நாடுகள், எதிர்காலத்தில் உருவாகும் புயல்களுக்காக, 169 பெயர்களை தேர்வு செய்துள்ளன.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர் மிருத்யுஞ்ஜெய மொஹாபத்ரா கூறியதாவது: கடந்த, 2004ல், அப்போது இருந்த குழுவினரால் சூட்டப்பட்ட பெயர்களில், 'அம்பான்' என்ற பெயர் மட்டும் மீதம் உள்ளது. இப்பெயர், வரும் நாட்களில் முதலில் உருவாகும் புயலுக்கு சூட்டப்படும். இதைத்தொடர்ந்து வரும் புயல்களுக்காக, தற்போது உள்ள குழுவினர், 169 பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், வடக்கு இந்திய பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில், 5 புயல்கள் மட்டுமே உருவாகும் என்பதால், தற்போது வழங்கப்பட்டுள்ள பெயர்களை, அடுத்த, 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு நாடும், 13 பெயர்களை பரிந்துரைத்துள்ளன. இதில், வங்கதேசத்தின், அர்னாப் என்ற பெயரும், கத்தாரின், ஷாஹீன் என்ற பெயரும், பாகிஸ்தானின், லுலுா என்ற பெயரும், இறுதி செய்யப்பட்டுள்ளன. இதேபோல், இந்தியா, காதி, தேஜ், முரசு, ஆக், நீர், பிரபஞ்ஜன், குர்னி, அம்புத், ஜலதி, வேகா ஆகிய பெயர்களை பரிந்துரைத்துள்ளது. இந்தப்பெயர்களை, பொது மக்களின் கருத்துக்களின் வாயிலாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தேர்வு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
AthibAn Tv